புதன், 5 ஜனவரி, 2022

தினம் ஒரு மூலிகை - சளியை கரைத்து விரட்டும் மூலிகை கஷாயம்

 

சளியை கரைத்து விரட்டும் மூலிகை கஷாயம்

முன்னோர்கள் காலத்தில் பருவகால உணவில் மழைக்கால உணவுகள் தனித்துவம் கொண்டவை. மழைக்காலங்களில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவில் இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு, சுக்கு போன்றவற்றை அதிகமாகவே சேர்ப்பதுண்டு.

மிளகு ரசம், கொள்ளு ரசம் போன்றவை சளித்தொற்று பிரச்சனையிலிருந்து காப்பாற்றக்கூடியவை. குடிக்கும் நீரில் சீரகம், ஒமம்,துளசி, கற்பூரவல்லி என்று சேர்த்து தினம் ஒரு நீராக குடிப்பதன் மூலம் நோய்களிலிருந்து தற்காத்துகொண்டார்கள்.

கையோடு மூலிகைகளையும் உணவாக பயன்படுத்தினார்கள். அப்படியான மூலிகைகள் சளியை உடலிலிருந்து முழுமையாக வெளியேற்றியது. அவற்றில் ஒன்று  தான் இந்த கசாயம்.

நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்

மழைக்காலங்களில் இந்த பொடியை தயார் செய்து வைத்துகொள்ளுங்கள்.

1.      மிளகு -5 டீஸ்பூன்

2.     சுக்குப்பொடி - 10 டீஸ்பூன்

3.     தனியா -20 டீஸ்பூன்

4.     ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்  

இவை எல்லாவற்றையும் பொடித்து வைத்து கொள்ளுங்கள்.

(அளவு தேவைக்கேற்ப எடுத்து பொடித்து வைத்து கொள்ளலாம்) இந்த பொடியுடன் கஷாயம் தயாரிக்கும் போது இந்த மூலிகைகள் சேருங்கள்.

1.      தூதுவளை -கால் கைப்பிடி

2.     துளசி - கால் கைப்பிடி

3.     கற்பூரவல்லி - 2 இலை

4.     ஆடாதோடை இலை - கால் கைப்பிடி

மூன்று டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளை போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை அணைக்கவும். அரைத்த பொடி ஒரு டீஸ்பூன் அளவு போட்டு விடவும்.

எசன்ஸ் முழுமையாக இறங்கியதும் இலைகளை மட்டும் வெளியேற்றி        ( அப்படியேவும் குடிக்கலாம்) பனைவெல்லம் அல்லது தேன் சேர்த்து கொடுக்கவும்.  

5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு - கால் டம்ளர் அளவு கொடுக்கலாம். 9 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை டம்ளர் அளவு கொடுக்கலாம்.

பெரியவர்கள் முக்கால் டம்ளர் அளவு எடுக்கலாம். தினமும் இரண்டு வேளை கொடுத்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி கரைந்து மலத்தில் வெளியேறும். பெரியவர்கள் தினமும் மூன்று வேளை வரை எடுக்கலாம். தொடர்ந்து ஒரு வாரம் வரை கொடுக்கலாம்.

சளி உள்ளுக்குள் தொடர்ந்து இருந்தால் ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு வாரம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக கொடுக்கும் போது பொடி அளவையும் இலைகள் அளவையும் குறைத்து கொடுக்கலாம்.

இனிப்புக்கு அதிகமாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் மறுக்காமல் குடிப்பார்கள்.